Saturday 12 January 2013

மாணவர்கள் அறிவை தேடித்தேடி பெற வேண்டும்: கலாம் அறிவுரை



             மிகப்பெரிய லட்சியம், அறிவைத் தேடித்தேடி பெறுவது, கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவை மாணவர்களுக்கு வெற்றியை தேடித் தரும்" என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். சேலம், பெரியார் பல்கலையில், ஆற்றல்சார் தனிச்சிறப்பு இயற்பியல் மையம் மற்றும் உயர்நுட்ப ஆய்வகம், அதிநுண் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப மையம், புவித் தகவலமைப்பு மற்றும் கோளியல் மையம், பாடத்திட்ட மேம்பாட்டுப்பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிப் பிரிவு ஆகியவற்றின் துவக்க விழா, சிறந்த விஞ்ஞானிகள், நல்லாசிரியர் மற்றும் பல்கலை பணியாளர் குழந்தைகளில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோர் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, துணைவேந்தர் முத்துச்செழியன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.
                         
பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மையங்களை திறந்து வைத்து, விருது வழங்கி பேசியதாவது: மாணவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகவே கருதப்படும். அடுத்து அதற்கான அறிவைத் தேடித்தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சியும் இருக்க வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். இந்த நான்கும் மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. நேற்று இயற்கை வளங்கள் முக்கியமாக கருதிய நிலை மாறி, இன்று அறிவு முக்கிய சொத்தாக கருதும் நிலை உள்ளது. தலைமையிடத்தில் உள்ளவர்கள் கட்டளையிடும் நிலை மாறி, கற்றுக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னுரிமை கொடுத்த நிலை மாறி, இன்று தகுதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த சூழலில் தற்போது அறிவு சார் சமூகத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
                           
இதில் ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதில் பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எகாலஜி ஆகிய நான்கு துறைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றில் புதுப்புது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் உருவாக்க வேண்டும். குறிப்பாக சோலார் சிஸ்டம், நியூக்ளியர் மின் உற்பத்தி, ஸ்டெம் செல் ஆய்வு, நோய்களுக்கான தடுப்பு மருந்து உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
.

No comments:

Post a Comment