அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கேட்டுக்கொண்டார். திருச்செங்கோடு எஸ்.பி.கே. பள்ளியின் 11-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர்
செங்கோடன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சுகந்தி வேல்முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது: பெற்றோர் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அதைப் படிக்க அனுமதி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். அரசுப் பள்ளியில் படித்தால் குறைந்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது தவறான கருத்து. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள் நிறைய பேர் சாதனைப் படைத்துள்ளனர். மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு தந்துள்ளது. அவற்றை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜகந்நாதன், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, டிஎஸ்பி சுஜாதா, பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பள்ளிப்பாளையம் செந்தில், திருச்செங்கோடு பாலசுப்பிரமணியம், பள்ளி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தலைமை ஆசிரியை சூசன் வரவேற்றார்.
No comments:
Post a Comment