Saturday 12 January 2013

பள்ளி சீருடைகள் அளவு சரியில்லை: மாணவ, மாணவிகள் அவதி



         அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், அளவு சரியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும்,
பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு, நான்கு ஜோடி, சீருடை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், கடந்த வாரம் சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பேன்ட், சர்ட் அளவு சரியில்லாமல் தைக்கப்பட்டிருந்தன.
                              
சில சீருடைகள், கிழிந்தும் காணப்பட்டன. மேலும், சில மாணவர்களுக்கு, இறுக்கமாகவும், சில மாணவர்களுக்கு, "தொள தொள" எனவும் ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது.
 
குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, முழுக் கால் சட்டை அணிந்து தான், பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை, மாணவர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். பயன்படுத்த தகுதியற்ற நிலையில், சீருடைகள் வழங்கப்படுவதால், அரசு பணம் தான் விரயமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment