பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் திறன் குறைந்து வருவது குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பாடச்சுமை அதிகமாக உள்ளதாக தற்போதைய அரசு
கண்டறிந்து பொதுப்பாடத்திட்டம் என்று பெயர் மாற்றம் செய்து முப்பருவ கல்வி முறையை அறிமுகம் செய்தது. அதன்படி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமா கவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் பாடப்புத்தகங்களை பிரித்து அரசு வழங்கி வருகிறது. இரண்டாம் பருவ தொகுத்தறித் தேர்வு இன்று(டிசம்பர் 17ம் தேதி) முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளிகளில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன்கள் முழுமையாகத் தர அளவீடு செய்யப்படுகிறது. மாணவனுக்குள் பொதிந்துள்ள பன்முகத்திறன் வெளிக்கொண்டு வரப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மாணவனின் கல்வி செயல்பாடுகள், கல்வி இணைசெயல்பாடுகள், உடல்நலக்கல்வி, யோகக்கலை, நன்னடத்தைகள், நன்னலம், வாழ்வியல் திறன் என அனைத்துக் கூறுகளும் மதிப்பிடப்படுகிறது.
இவ்வாறு மதிப்பிடுவதால் மாணவனின் ஆளுமை வளர்ச்சியை முழுமையாக அறிய முடியும். மாணவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் அடையூக்கம் மிக்கவர்களாகவும் உருவாவதற்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பெரு மளவு வாய்ப்பு அளிக்கிறது.
ஆனால் புதிய திட்டத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர். ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து புள்ளி விபரம் தயாரிப்பதற்கும், கல்வி அதிகாரிகள் தொலைபேசி மூலம் தெரிவித்து நடத்தப்படும் கூட்டங்களுக்கு செல்வதற்கும், ஒவ்வொரு பருவத்திற்கும் புத்தகம் பெற்று வருவதற்கு தலைமையகம் சென்று வருவதற்கு நேரம் சரியாக இருக்கிறது.
பல்வேறு வேலைபளு காரணமாக ஆசிரியர்கள் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாணவர்களிடையே வாசித்தல் திறன் படிப்படியாக குறைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கல்வித்துறை போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
No comments:
Post a Comment