Friday 11 January 2013

உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25% ஆக உயர்த்த நடவடிக்கை - தமிழக அரசு



                  தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. தமிழக
கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: இளைஞர்களை அறிவுடன், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களாக மாற்றுவதே உயர்கல்வியின் நோக்கம். உலகளவில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் தற்போது உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 12 சதவீதம். இதை, 2025ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
                           
அரசு கலை மற்றும் அறிவியியல், பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்குவது, மாணவர்களுக்கான இலவச லேப்டாப்கள் வழங்குவது, கல்வி நிறுவனங்கள்- தொழிற்சாலைகள் இணைப்பை வலுப்படுத்துவது, அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. உயர் கல்வியை சர்வதேச தரம் வாய்ந்ததாகவும், அறிவாற்றல் மிகுந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கவும் வகையிலும் இந்த அரசு செயல்படுகிறது. பட்டங்கள் பெறுவதை, சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்கான அத்தாட்சி சீட்டாக நினைத்து, எதிர்கால பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மாணவர்களின் செயல்பாடு அமைய வேண்டும்" என்றார். மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் பேசுகையில்,  "தலைமைப் பண்பு, முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் தேவை. பொது வாழ்வில் பெண்களை தகுதியுள்ளவர்களாக மாற்றும் வகையில், பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பல்கலைகள் வடிவமைக்க வேண்டும் என்றார்.
                         
துணைவேந்தர் மணிமேகலை பேசுகையில், "1984ல் துவங்கப்பட்ட இப்பல்கலை, மகளிர் கல்வி மேம்பாட்டில் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்தாண்டு 230 பி.எச்டி., பட்டங்கள், முதுகலையில் 3126, இளங்கலையில் 6459 என மொத்தம் 11,715 பேர் பட்டங்கள் பெற்றுள்ளனர் என்றார்
.

No comments:

Post a Comment