Tuesday 29 January 2013

புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்



              புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள்
வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு 2010-11-ம் கல்வியாண்டில் 10,935 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு அதற்கடுத்த ஆண்டில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டண நிர்ணயம் பொருந்தும் என்பதால் வரும் 2013-14-ம் கல்வியாண்டுக்கு புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு தொடங்கியுள்ளது.
                                    
இந்தப் பணிகள் தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது: முதல் கட்டமாக 12,536 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணய விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்படும். புதிய கட்டணங்களை நிர்ணயிப்பதற்குத் தேவையான விவரங்களைச் சேகரிப்பதற்காக பள்ளிகளுக்கு தனித்தனியாக கேள்விப் படிவங்களும் வழங்கப்படும். இந்த நோட்டீஸ் மற்றும் கேள்விப் படிவங்கள் ஆகியவை கடந்த முறை போலவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் நேரடி விசாரணைக்கு வரும்போது, பூர்த்தி செய்யப்பட்ட கேள்விப் படிவங்களை கொண்டுவர வேண்டும். முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் நர்சரிப் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். நாளொன்றுக்கு அழைக்கப்படும் 40 பள்ளிகளில் 30 நர்சரிப் பள்ளிகளும், 10 இதரப் பள்ளிகளும் இடம்பெறும். டிசம்பருக்குள் கட்டணம்: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 2014 மார்ச் வரை குழுவுக்கு கால அவகாசம் உள்ளது.
                         
கருத்தில் கொள்ளப்படும் முக்கிய அம்சங்கள் எவை? பள்ளிகளின் செலவினத்தில் மாணவர்களின் கற்றலுக்கு அவை எந்த அளவுக்குப் பயன்பட்டன என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கற்றலுக்குப் பயன்படும் செலவினங்களைக் கருத்தில் கொண்டே புதிய கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும். பெற்றோர், பள்ளி நிர்வாகம் ஆகிய இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்டண உயர்வு இருக்கும். ரூ.1.5 கோடி ரூபாய் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு: நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக வசூலித்ததாக எழுந்த புகார்களை விசாரித்து இதுவரை ரூ.1.5 கோடி பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து பெற்றோருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் மீது வரும் புகார்களை விசாரித்து அதிகமாக வசூலித்த கட்டணத்தை மீண்டும் பெற்றோர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு குழு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
                             
குழுவின் பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பள்ளிகள், புதிய பள்ளிகள் என இதுவரை 1,500 பள்ளிகளுக்கு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டுக்கு எந்தக் கட்டணம்? தமிழகம் முழுவதும் உள்ள 12,536 தனியார் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 2013-14 கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய கட்டணம் நிர்ணயித்த பிறகு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் அதிகமாக இருந்தால் பெற்றோரிடம் அவற்றை திருப்பி வழங்க வேண்டும். வசூலித்த கட்டணம் குறைவாக இருந்தால் மீதமுள்ள தொகையை மட்டுமே பெற்றோரிடமிருந்து பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
.

No comments:

Post a Comment